மாற்றுத் திறனாளிகளை ஆதரிப்போம்

மாற்றுத் திறனாளிகள் தினம்: முதல்வர் வாழ்த்து

மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்பொழுது தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுவரும் சலுகைகள் பற்றி விவரமாக கூறியுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகம் முழுவதும் டிசம்பர் திங்கள் 3-ஆம் நாள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாற்றுத் திறனாளிகள் சம வாய்ப்புகள் பெற்று வாழ்வில் ஏற்றம் பெற்றிட, மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை 1000 ரூபாயாக உயர்த்தியது; ஆரம்ப நிலை பயிற்சி மையத்திற்கு வரும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு சத்துணவு; சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, வாசிப்பாளர் உதவித் தொகை ஆகியவை இருமடங்காக உயர்வு; அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளின் இடைநிற்றலைத் தவிர்க்கும் வகையில் உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை; மாற்றுத் திறனாளிகளின் சுயவேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தேசிய திரைப்படக் கழகத்தின் மூலம் பல்லூடகப் பயிற்சி (ஆரடவiஅநனயை கூசயiniபே) மற்றும் இலக்கமுறை புகைப்படப் பயிற்சி ( என பல்வேறு நலத் திட்டங்கள் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

மேலும், இந்தியாவிலேயே முதன்முறையாக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 4 மணிநேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் வழங்கப்படுவது; சென்னையில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் குறைபாட்டினைக் கண்டறிந்து தேவையான உபகரணங்கள், சான்றிதழ்கள், உதவித்தொகை, சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்குதல்; பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத வீடுகள் ஒதுக்கீடு; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்புத் தேர்வு; ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு; ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச வயது வரம்பு 45-லிருந்து 18-ஆக குறைப்பு; இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள்; செவித்திறன் குறையுடைய குழந்தைகளுக்கு நவீன காதொலிக் கருவிகள்; பார்வைத்திறன் குறையுடைய மாணவ, மாணவிகளுக்கு எழுத்துகளைப் பெரிதாக்கி படிப்பதற்கான கருவிகள்; பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்குச் குச்சிகள்; மாற்றுத் திறனாளிகளுக்கு பேருந்துப் பயணச் சலுகை; குடும்பத்தில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருந்தால் அக்குடும்பத்திலுள்ள அனைவருக்கும் வருமான உச்சவரம்பின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன் போன்ற எண்ணற்ற சீர்மிகு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திடவும், அவர்கள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக வாழ்ந்திடவும், தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் மாற்றுத் திறனாளிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டு, மாற்றுத் திறனாளிகள் தின வாழ்த்துகளை மீண்டும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

வீல்-சேர் நோயாளி நடந்த அதிசயம் (வீடியோ)

1911ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை அமெரிக்காவில் வாழ்ந்தவர் எ.எ.ஆலன் (படத்தில் இருப்பவர்). இவர் செய்த அற்புதங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன. இயேசுவின் நாமத்தில் எழுந்து நட என்று இவர் சொல்ல வீல் -சேரில் பல மாதங்களாக இருந்த ஒருநோயாளி எழுந்து நடக்கிறார். பேரும் அதிசயம்!!! வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளி பெட்டியில் பயணம்: 29 பேருக்கு அபராதம்

சென்னை, ஆக. 16 – ரெயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் பெட்டியில் பிற பயணிகள் ஏறி பயணம் செய்வதாக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ராகேஸ் மிஸ்ராவிடம் மாற்றுத் திறளாளிகள் சங்கம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொது மேலாளர் ராகேஸ் மிஸ்ரா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி புறப்பட தயாராக இருந்த ரெயிலில் மாற்றுத் திறனாளிகள் பெட்டியில் வேறு யாரும் பயணம் செய்கிறார்களா? என ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில் எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பொது மேலாளர் ராகேஸ் மிஸ்ரா மீண்டும் சோதனை மேற்கொண்டார்.

மாற்றுத் திறனாளிகள் பெட்டியில் ஏறி அவர்களின் டிக்கெட்டுகளை வாங்கி பார்த்தார். அதில், 12 பயணிகள் அமர்ந்திருந்தனர். அவர்களில் 7 பயணிகள் மாற்றுத் திறனாளிகள் அல்லாதவர் என தெரிய வந்தது.

அவர்கள் சாதாரண டிக்கெட் எடுத்து மதுரை வரை பயணம் செய்ய இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

இதையடுத்து அந்த 7 பயணிகளுக்கும் அபராதம் விதித்ததோடு கீழே இறக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

இதற்கிடையில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றதால் அந்த பயணிகளை தாம்பரம் ரெயில் நிலையத்தில் இறக்கி அபராதமாக ரூ.1785 வசூலிக்கப்பட்டது.

மேலும் தாம்பரம் ரெயில் நிலையத்திலும் இதேபோல மாற்றுத்திறளாளிகள் பெட்டியில் 22 பேர் ஏறி அமர்ந்தனர். அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு கீழே இறக்கி விடப்பட்டனர்.

நன்றி: www.thinaboomi.com

மாற்றுத் திறனாளிகளுக்கு இருமடங்கு வரிச் சலுகை???

மாற்றுத் திறனாளிகளுக்கு இரு மடங்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகம் முன் வைத்துள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு இரு மடங்கு வரிச் சலுகை அளிக்கும்படி நிதியமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறையின் அமைச்சர் தவார் சந்த் கெலோட் கூறினார். தனது கோரிக்கையை நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.

1995-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக மாநில ஆணையர்கள் பங்கேற்ற 13-வது தேசிய மாநாட்டில் பேசிய அவர் இக்கருத் தைத் தெரிவித்தார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தாக்கல் செய்த மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2014-ஐ புதிய அரசின் நாடா ளுமன்ற நிலைக்குழு பரிசீலிக்கும் என்று கூறினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான சுற்றறிக்கை பல்வேறு துறைகளுக்கும் மாநிலங்களுக்கும் அனுப்பப்பட் டுள்ளதாக அவர் கூறினார்.

மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரம் உயர அனைத்து நடவடிக்கைகளையும் தங்கள் துறை எடுக்கும் என்று இத்துறைக்கான இணையமைச்சர் சுதர்சன் பகத் உறுதியளித்தார்.

சக்கர நாற்காலியில் உட்கார்ந்ததால் சமூக சேவகனாக இருக்க முடிகிறது- விபத்தால் திசை மாறிய வெங்கடபூபதியின் வெற்றிப் பயணம்

‘‘ஓடிக்கொண்டே இருந்திருந்தால் என்னை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்திருப்பேன்” என்கிறார் வெங்கடபூபதி.

தேனியை அடுத்த வடபுதுப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடபூபதி. டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு ராணுவத்தில் சேர்ந்தார். தான் நினைத்ததற்கு மாறாக ராணுவ முகாம் இருந்தததால், ஏழே வருடத்தில் விருப்ப ஓய்வில் வெளியில் வந்து விட்டார். ராணுவத்தில் இருக்கும்போதே எம்.ஏ., சமூகவியல் முடித்திருந்த வெங்கடபூபதி, வெளியில் வந்ததும் சமூகத்தை பற்றி சிந்திக்கத் தொடங்கினார். ஆனால், இயற்கை அவரது வாழ்க்கையில் வேறுமாதிரி விளையாடிவிட்டது. ஆனாலும், தான் நினைத்ததை கொஞ்சம் கொஞ்சமாக சாதித்துக் கொண்டிருக்கிறார். அதுகுறித்து அவரே விளக்குகிறார்..

1993-ல் ராணுவத்தில் இருந்து வந்ததுமே இயற்கை விவசாயத்தை கையில் எடுத்தேன். எங்கள் கிராமத்தில் இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ‘உழவர் மன்றம்’என்ற அமைப்பை உருவாக்கினேன். இயற்கை விவசாயம் செய்வதற்கு விவசாயிகளுக்கு வங்கிக் கடன்களை வாங்கிக் கொடுத்தேன்.

கிராமத்து மக்கள் ஆயுள் காப்பீடு குறித்து அவ்வளவாய் அக்கறை இல்லாமல் இருந்தார்கள். அதனால், நானே எல்ஐசி முகவராகி, பலரை ஆயுள் காப்பீடு செய்ய வைத்தேன். இறப்புக்குப் பிறகும் குடும்பத்தை வாழவைக்க முடியும் என அவர்களுக்கு புரியவைத்தேன்.

என் கிராமத்தை மாதிரி கிராமமாக மாற்ற வேண்டும் என்று எனக்குள் நிறைய கனவுகளை வைத்திருந்தேன். இடையில் ஏற்பட்ட ஒரு விபத்து, என்னை வேறு திசையில் பயணிக்க வைத்துவிட்டது. 2009-ல் சாலை விபத்தில் எனக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது. குணப்படுத்த முடியும், முடியாது என்று சொல்லாமலேயே 6 மாத காலம் சிகிச்சையளித்து 15 லட்சத்தை கரைத்துவிட்டனர். கடைசி யில், இடுப்புக்குக் கீழே செயலற்ற நிலையில் சக்கர நாற்காலியில் வீட்டுக்கு அனுப்பினர்.

வீடுவரை மனைவி என்று கண்ணதாசன் பாடினார். ஆனால், எனக்கு விபத்துவரைதான் மனைவி. இடுப்புக்குக் கீழே செயலிழந்துவிட்ட என்னோடு வாழ என் மனைவிக்கு இஷ்டமில்லை. விவாகரத்து வாங்கிக் கொண்டு போய்விட்டார். ‘மாற்றுத் திறனாளி ஒருவரால் சிறுவனுக்கு பாதுகாப்பான வாழ்க்கையைத் தரமுடியாது’என்று சொல்லி ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த எனது மகனையும் பிரித்துவிட்டார்கள். அந்த மன அழுத்தத்தில் தற்கொலை முடிவுக்கே போய்விட்டேன்.

அப்போதுதான் எனது குருநாதரான அமர்சேவா சங்கத்தின் ராமகிருஷ்ணன், ‘உன்னால் முடிக்கப்பட வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது’ என்று சொல்லி எனக்கு இன்னொரு வழியைக் காட்டினார்.

குருநாதர் பெயரிலேயே ராம்ஜி டிரஸ்ட் என்ற அமைப்பை ஏற்படுத்தி, மாற்றுத் திறனாளிகளுக்கு மனதளவில் உள்ள பிரச்சினைகளை கண்டுபிடித்து கவுன்சலிங் கொடுத்தேன். அத்துடன் அவர்களுக்கு தன்னம்பிக்கை வருவதற்காக கம்ப்யூட்டர், தையல், செல்போன் சர்வீஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்குதல் உள்ளிட்ட பயிற்சிகளை கொடுக்க ஆரம்பித்தேன்.

அருகிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரி உதவியுடன் இதுவரை 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் பயிற்சி கொடுத்திருக்கிறோம். விவசாயத்தின் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. அதை வைத்தும் நண்பர்கள் துணையோடும் எங்கள் சேவை தொடர்கிறது.

என்னை கவனிக்க எனது 77 வயது அம்மா இருக்கிறார். என்னைப் போல் தண்டுவடம் பாதித்த மாற்றுத் திறனாளிகள் பலர் கவனிக்க ஆளில்லாமல் இருக்கிறார்கள். முதல்கட்டமாக இந்த ஆண்டு அவர்களில் நான்கு பேரை எங்களது பொறுப்பில் தங்கவைத்து அவருக்கான உதவிகளை வழங்கப் போகிறோம். 

ஓடிக்கொண்டே இருந்திருந்தால் என்னை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்திருப்பேன். சக்கர நாற்காலியில் உட்கார்ந்ததால் ஒரு சமூக சேவகனாக இருக்க முடிகிறது. மரம் வைத்தவன் எனக்கும் தண்ணீர் ஊற்றுகிறான் என பூரிப்புடன் சொன்னார் வெங்கடபூபதி.

நன்றி: http://tamil.thehindu.com/.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூலை 1, 2 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 4,477 பேர் பங்கேற்ற இந்தத் தேர்வில் 933 பேர் (20 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர்.

இதையடுத்து, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான சுய விவரப் படிவம், அடையாளப் படிவம், அங்கீகாரப் படிவும் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இதில் பங்கேற்பதற்காக அழைப்புக் கடிதங்கள் தனியாக அனுப்பப்படாது.

மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை: 

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் சலுகை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, அவர்கள் இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேறு யாரையாவது நியமிக்கலாம். அதற்காக அங்கீகாரக் கடிதத்தை தேர்வர் அந்த நபருக்கு வழங்க வேண்டும்.

சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடங்கள்:

மதுரை மண்டலம் :

கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் - ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுரை

சேலம் மண்டலம் :

நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் - அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேலம்

திருச்சி மண்டலம் :

புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர் - செயின்ட் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை, திருச்சி

விழுப்புரம் மண்டலம்:

விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 20 சதவீதம் பேர் தேர்ச்சி

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 20.8 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்வை எழுதிய 4,477 பேரில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின்  http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) வெளியிடப்பட்டுள்ளன.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை 4,477 பேர் எழுதினர்.

சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி தனியாக அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4,694 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 5 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.